குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் சிறைப்படுகொலை பொது நினைவேந்தல் நாள் நிகழ்வும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை(25) யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

இதன் போது 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமுக்குள் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இருபது தமிழ் அரசியல் கைதிகள் மற்றும், 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் வரிசையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை இறுதியாண்டு மாணவனின் அரசியல் கைதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய “தசாப்தங்கள் – 03” எனும் குறும்படமும் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, தற்போதும் மிக நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் ஒருமித்த தமிழ் தரப்புகள் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வு அரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மதகுருமார்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன், யாழ் மாநகர மேனாள் முதல்வர் சட்டத்தரணி திரு. விசுவலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இளையோர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.