ஈழ நாடு அமைப்பின் சார்பாக, செல்வன் சுகந்தன் திவியன் அவர்களது நிதி அன்பளிப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த இளைஞர்கள், “நீண்ட நாட்களாகவே இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியிருந்தோம். அது இப்போது கைகூடியிருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் குறிப்பிட்டனர்.

உதவிகளை வழங்கிவைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் “மிகச் சிறிய வயதில், வெறும் இருபது வயதிலேயே இத்தகைய சமூகப் பொறுப்புடன் இளைஞர்கள் முன்வந்து இந்த உதவியை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் ஒரு பெரிய மாற்றத்தையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் தருகிறது” எனத் தெரிவித்து தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்ற இவ் நற்பணித் திட்டத்தினை, இராமலிங்கம் அவர்கள் ஒழுங்கமைத்திருந்ததோடு, சுரேஸ்குமார் டிசாலன் மற்றும் அஜித்குமார் வேணுயன் ஆகியோர் முன்னின்று செயற்படுத்தியிருந்தனர்.
